Sunday, July 24, 2011

நோட்டீஸ் போர்டு

" ஊழல் பணத்தில் வாங்கப்படும் குடிநீரும் கழிவு நீரே"

இது சென்னையில் அன்னாஹசாராவின் "ஊழலுக்கு
எதிரான இந்தியா " வெளியிட்டுள்ள போஸ்டர்.
பல ஆட்டோக்களின் பின்புறம் ஒட்டப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் பாராட்டுக்குரியது.
குடிநீரை கழிவுநீர் எனச் சாடும் கோபமும் நியாயம்தான்.

ஆனால் குடிநீரை மனித உரிமையாக அன்றி
அதைச் சரக்காக மாற்றியது
கார்பரேட்களின் பெரும் பெரும் ஊழல்.

அன்னாவின் இயக்கம் அரசியல்வாதிகளையே குறிபார்க்கிறது.
கார்பரேட்கள் அதன் சூட்டிங் ரேஞ்சுக்குள்ளேயே வருவதில்லை.

Thursday, July 21, 2011

ஆகஸ்ட் 10 அன்று சென்னையில் பட்டியலினத்தவர் துணைத்திட்டக் கோரிக்கை சாசன வெளியீட்டுக் கருத்தரங்கம்


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எதிர்வரும் ஆகஸ்ட் 10
அன்று சென்னையில் பட்டியலினத்தவர் துணைத்திட்டக் கோரிக்கை
சாசன வெளியீட்டுக் கருத்தரங்கத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது
.
சமுக நீதிக்கான பயணத்தில் இன்னுமோர் முக்கியமான நிகழ்ச்சி நிரலை
தமிழக அரசியலில் முன்னுரிமை பெறச் செய்வதற்கான முன்முயற்சியை
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேற்கொண்டிருப்பது
பாராட்டுதலுக்கு உரியது. இக் கருத்தரங்கின் வழிநடத்தும் குழுவில் தோழர்
ஜே.குருமூர்த்தி, தோழர் கே.சுவாமிநாதன், தோழர் ஜி .ஆனந்த்,
தோழர் டி.செந்தில்குமார் இடம் பெற்றுள்ளனர். ஏற்கெனெவே தமிழ்நாடு
நிதியமைச்சர் மாண்புமிகு ஒ.பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து
துணைத்திட்டத்திற்கு பட்டியலின, பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப
நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்றும்,
அந்நிதி அம்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டிற்கு முழுமையாகப் போய்ச்
சேருகிற வகையில் அமலாக்கப்பட வேண்டுமேன்றும் வலியுறுத்திய
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குழுவிலும் தோழர் க.சுவாமிநாதன்
இடம் பெற்றிருந்தார்.

1979 வாக்கில் இந்தியப் பொருளாதாரப் பாதையின் பயன்கள் ஒடுக்கப்
படுகிற மக்களுக்கு சென்றடையவில்லை என்பதை ஆட்சியாளர்கள்
ஏற்றுக் கொண்டு அறிவித்த திட்டமே பட்டியலின, பழங்குடி மக்களுக்கான
துணைத் திட்டங்கள்.
இத் திட்டத்தின் முதற்பெரும் அம்சம், அவர்களின் மககள் தொகைக்கேற்ப
நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதே. ஆனால் மத்தியிலும்,
மாநிலங்களிலும் சரி, நிதி ஒதுக்கீடிற்கும், மக்கள்தொகையில் அவர்களின்
விகிதத்திற்கும் இடையே பெரும் அகழிதான் 30 ஆண்டுகளாக நீடித்து
வருகிறது. சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு இயக்கங்கள் பல குரல் கொடுத்தும்
ஆட்சியாளர்களின் செவிகளில் ஏறவில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணி
2008 ல் சென்னையில் ஓர் கருத்தரங்கம் மூலம் இப் பிரச்சினை மீதான
கருத்துருவாக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டது. இத்தகைய
கருத்துத் திரட்டலின் பயனாக 2010 - 11 நிதியாண்டில்தான் முதல் முறையாக
தமிழகத்தில் மககள் தொகைக்கேற்ப ரூ 3828 கோடிகள் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. அதற்கு முன்பு இழந்த தொகைகள் இந்தியா முழுவதும்
நான்கரை லட்சம் கோடிகள் இருக்கும் என்றால் பாருங்களேன்! எனினும்
மககள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு என்பது தீண்டாமை ஒழிப்பு முன்னணி
உள்ளிட்ட அமைப்புகளின் முன்முயற்சிகளுக்கு கிட்டியுள்ள வெற்றியேயாகும்.
தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி கவனமும், முயற்சிகளும் குவிய
வேண்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள்
என்பதே! டெல்லியில் துணைத்திட்ட நிதியை எடுத்து காமன்வெல்த் விளையாட்டுப்
போட்டிகளுக்காக செலவிட்டதும், அதில் ஊழல் வெடித்ததும் நாம் அறிந்ததே.
இப்படி பட்டியலின மக்களுக்கான நிதியை சம்பந்தமில்லாமல் சூறையாடுவதும்,
பொதுத் திட்டங்களுக்கு செலவழித்து விட்டு துணைத்திட்டக் கணக்கில் கழிப்பதும்
நடைமுறையாக இருக்கிறது. ரூ 3828 கோடிகளை ஒதுக்கிய முந்தைய தமிழக
அரசு அதை எப்படி கணக்கு காண்பித்தது என்பது வேடிக்கையானது. வேதனையானது.
கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம், டாக்டர்
முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், கான்க்ரீட் வீடு திட்டம் போன்ற திட்டங்கள்
எல்லா மக்களுக்கும் பொதுவானவை. அவற்றுக்கான செலவில் 19 சதவீதத்தை
பட்டியலின, பழங்குடி மக்களின் கணக்கில் கழிப்பது என்பது ஏமாற்று வேலை
அல்லவா! தீண்டாமை ஒழிப்பு முன்னணி சென்னையில் ஓர் பயிலரங்கம் மூலம்
பொருளியல் நிபுணர்கள், கல்வியாளர்கள், சமுக நீதி ஆர்வலர்கள்
ஆகியோரை அழைத்து 2010 ல் பரந்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்தது. அதன்
அடிப்படையில் துணைத்திட்ட அமலாக்கத்தில் ஒடுக்கப்பட்ட மககள் வஞ்சிக்கப்படுவதை
வெளிக்கொணர்ந்ததோடு மாற்று ஆலோசனைகளையும் முன்வைத்தது.
ஓர் வரைவுக் கோரிக்கை சாசனம் உருவாக்கப்பட்டது. தொழில், விவசாயம், மகளிர் நலன்,
கல்வி, அடிப்படை வசதிகள் போன்றவற்றுக்காக துணைத்திட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்
படலாம் என்பதை ஆவணமாக உருவாக்கி வெளியிட்டது. அதன் மீதான கருத்துக்கள்
வரவேற்கப்பட்டன. தற்போது அதற்கு இறுதி வடிவம் தரப்பட்டுள்ளது. எதிர்வரும்
ஆகஸ்ட் 10 அன்று 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிற கருத்தரங்கமாக அது
சென்னையில் அரங்கேறவுள்ளது. கோரிக்கை சாசனம் வெளியீடு நிகழ்வாகவும் அது
அமையவுள்ளது.
திருமிகு கிறிஸ்து தாஸ் காந்தி இ.ஆ.ப, திருமிகு கருப்பன் இ.ஆ.ப, திருமதி சிவகாமி இ.ஆ.ப,
திரு பி சம்பத், (தலைவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி) கே.சாமுவேல்ராஜ் ( பொதுச் செயலாளர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி) தோழர் ஏ. சௌந்தரராஜன் ( சட்டமன்றக் குழுத் தலைவர்-சி.பி.எம் ) எஸ். கே.மகேந்திரன் ( முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்) தோழர் பீமாராவ் எம்.எல்.ஏஆகியோர் அழைக்கப்படவுள்ளனர். அகில இந்தியத் தலைவர்களைப் பங்கேற்கச் செய்கிற முயற்சிகளும் உள்ளன.
தமிழகம் முழுவதிலும் இருந்து தலித் அமைப்புகளின் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வெகுசன அமைப்புகளின் முன்னணி ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். நமது சங்கத்தின் முன்னணித் தலைவர்களும் அனைத்துத் தமிழகக் கோட்டங்களிலும் இருந்து பங்கேற்பார்கள் எனவும், சென்னைக் கோட்டம் 1 மற்றும் 2 திரளான பங்கேற்பை உறுதி செய்வதெனவும் ஜூலை 20 அன்று நடந்த மாநில அளவிலான தொழிற்சங்க, வெகுஜன அமைப்புகளின் கூட்டுக் கோட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய இயக்கத்தில் நமது கரங்களும் இணைய வேண்டாமா! சென்னைக்
கருத்தரங்கில் சங்கமிப்போம்! சமுக நீதிக்கான குரல் கொடுப்போம்!